Tuesday, December 28, 2010

ஊடகங்கள் இஸ்ரேல் தொடர்பான ரகசியங்களை வெளியிட மறுக்கின்றன - ஜூலியன்

மனாமா : இஸ்ரேல் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட தயங்குகின்றன என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜூலியன் அஸென்ஜேவின் பேட்டி சுருக்கம்:

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இஸ்ரேல் தொடர்பான 3700 ஆவணங்கள் உள்ளன. அதில் 2700 ஆவணங்களும் இஸ்ரேல் குறித்தவையாகும். கார்டியன், எல்பாய்ஸ், லெ மோண்டே ஆகிய பத்திரிகைகள் இஸ்ரேல் தொடர்பான 2 சதவீத ஆவணங்களை மட்டுமே பிரசுரித்தன. ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கும் இஸ்ரேலுடனான நெருங்கிய உறவுதான் இதற்கு காரணம்.

நியூயார்க் டைம்ஸ் கூட இஸ்ரேல் தொடர்பான செய்திகளை கூடுதலாக வெளியிடவில்லை. அமெரிக்காவில் யூத சமூகத்தின் செல்வாக்குதான் இதற்கு காரணம். ஆனாலும், விக்கிலீக்ஸ் இஸ்ரேல் தொடர்பான மிக ரகசியமான ஆவணங்களை வெளியிடும். அடுத்த ஆறுமாதத்திற்குள் கூடுதலான ஆவணங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மத்தியஸ்தர் மூலமாக இஸ்ரேல் எங்களை தொடர்புக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா, சுவீடன், சி.ஐ.ஏ போல மொஸாதும் எங்களை விடாமல் பின்தொடர்கிறது என்பது உறுதியாகும். முன்னர் எங்களுக்கு அமெரிக்காவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிதி கிடைத்துவந்தது. ஆனால், ஈராக்கில் அமெரிக்காவின் கொடூரத்தை விளக்கும் வீடியோவை வெளியிட்டதன் வாயிலாக அந்த நிதி முடக்கப்பட்டது.

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட 3700 ஆவணங்களை நாங்கள் வெளியிடுவோம். இதுத் தொடர்பான கூடுதல் விபரங்கள் இன்னும் 6 மாதத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்கும். 2006 ஆம் ஆண்டில் லெபனானுக்கு எதிரான யுத்தம், ஹமாஸ் கமாண்டர் மப்ஹூஹின் கொலை ஆகியன தொடர்பான சில விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளன. இவ்வாறு ஜூலியன் அஸென்ஜே பேட்டியளித்துள்ளார்.

0 comments:

Post a Comment