Thursday, March 3, 2011

அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும்-கடாபி

ட்ரிபோலி: லிபியாவில் நடப்பது வன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினை. இதை நானே பார்த்துக் கொள்வேன். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோ அல்லது அவர்களின் கைப்பாவையான ஐநா சபையோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கர்னல் மொம்மர் கடாபி.

லிபியாவில் அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் எச்சரித்து உள்ளன.

பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் எச்சரித்தது.

அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.

மேற்கு நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கைப்பாவையாகவே ஐநா நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.

அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம், என்றார்.

1 comments:

  1. இப்போ மட்டும் என்ன வாழுது?ஆறாயிரம்னு சொல்றாங்க!இத வுட ஆறு ஓடணுமா?

    ReplyDelete