Wednesday, August 25, 2010

மீட்புப்பணியில் முன்மாதிரி: 80 உடல்களை வெளியே எடுத்த 2 முஸ்லிம் இளைஞர்கள்.

காஸர்கோடு:மங்களூர் விமானவிபத்தில் மரணித்தவர்களின் உடல்களை உயிரை பணயம் வைத்து வெளியே எடுத்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப்பணியில் முன்மாதிரியாக திகழ்கின்றார்கள்.

கேரள மாநிலம் நாயன்மார்முல என்ற இடத்தைச் சார்ந்த ஒய்.முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா பிரசிடண்ட் ஆவார். அதே ஊரைச் சார்ந்த பி.ஏ.கஃபூர் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மண்டல செயலாளர் ஆவார். இவர்களிருவரும் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டவுடனேயே சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்றனர். காலை 10 மணிக்கு பாஜ்பேக்கு வந்த இருவரும் ஓய்வில்லாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கை,கால்களை இழந்த உடல்கள், பூரணமாக எரிந்த உடல்கள், விமானத்தின் பாகங்களோடு ஒட்டிக்கிடந்தவை என 80 உடல்களை இவர்கள் விபத்திற்குள்ளாகி எரிந்துபோன விமானத்தின் பாகங்களுக்கிடையேயிருந்து மீட்டுள்ளனர்.கடுமையான சூடும், புகையும் வந்ததால் பலரும் விமானத்தின் அருகில் செல்ல பயந்த சூழலில் இவர்களிருவரும் உயிரையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

எரிந்துபோன விமானத்திலிருந்து பாஸ்போர்ட்டுகள், ஊருக்குச் செல்லும்பொழுது நேசத்திற்குரியவர்களுக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்த ஸ்வீட் மிட்டாய்கள், பானங்கள் தயாரிப்பதற்கான பொடிகள் ஆகியவற்றை இவர்கள் கண்டெடுத்தனர்.க்ளவுஸ் கூட அணியாமல்தான் இவர்கள் இறந்துபோன உடல்களை எடுத்துள்ளனர். மரணத்தில் கூட இணைபிரியாமல் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்த தம்பதிகளின் என்று கருதப்படும் இரண்டுபேரின் உடல்கள் கண்ட காட்சி நெஞ்சத்தை தொட்டதாக இவர்கள் நினைவுக்கூறுகிறார்கள்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment