Thursday, February 3, 2011

இந்திய அரசியல் வானில் உருவாகும் புதிய மாற்றங்கள் ஈழத் தமிழினம் வெற்றி கொள்ள ஏற்ற தருணம் இது !

த.எதிர்மன்னசிங்கம்.
 
2011ல் இந்திய அரசியல் வானில் பல மாற்றங்கள் உருவாகும் நிலை தென்படுகின்றது. இதன் முக்கிய அங்கமாக வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழ் எரிமலையாக உருவாகி வரும் சீமான் கலைஞரை எதிர்த்துக் களம் இறங்கும் காட்சி அரங்கேறுவது உறுதியாகி விட்டது. அவரை எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதென செல்வி ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளது சீமானுக்குப் பெரும் பயன் தரவல்ல விடையமாகும். 
இதனை சாத்தியம் ஆக்கியவர் அ.தி.மு.க.பொதுச் செயலர்  ஜெயலலிதாவுடன் நெருக்கமான உறவைப் பேணிவருபவரான ம.மு.தி.க செயலர் வை.கோ. ஆகும். அதன் மறுதலையாக வை.கோ. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் குரலை டில்லியில் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை சீமான் முன்வைத்தார் எனவும் அதற்கு வை.கோவின் சாதகமான  பதில் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் சத்தியராஜ் நாசர் உட்படப் பல திரை உலக நட்சத்திரங்கள் சீமானுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வர் எனவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.  கலைஞர் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாது எவரும் திரை அரங்குகளில் தயாரிப்பாளர் தமது படங்களைக் காட்சிப்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. மிகப் பழம் பெரும்  திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இந்த நிலை உள்ளதாகச் செய்திகள் தொலைக் காட்சி உரையாடல்கள் தெரிவிக்கின்றன.
தமது திரைப் படங்களை காட்சிப் படுத்த திரை அரங்கு உரிமையாளர்கள முன் வருகிறார்கள் இல்லை என்றும் திரைப்படத் துறையே இன்று கலைஞர் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது எனப் பகிரங்கமாகவே பேச்சுகள் வெளிவருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் பொது வைபவத்தில் ஜெயலலிதா பங்கு பற்றி விட்டுத் தமது காரில் ஏறும் போது அவரிடம் நேரடியாக இது குறித்துப் பேசியதும் பின்னர் விஜயின் தந்தை சந்திரசேகரன் ஜெயலலிதாவை அவரது வீட்டில் போய் உரையாடியதும் நாம் அறிந்த செய்திகளே. எனவே சீமானின் மேடைகளில் இளைய தளபதி விஜய்யும் தோன்றி வாக்குக் கேட்கும் நிலை கூட வரலாம். அப்படியான நிலையில் கலைஞரின் வெற்றி கேள்விக் குறியாகலாம்.
எனவே அடுத்து வரும் காலங்களில் ஈழத் தமிழர் பிரச்சனை புதிய வேகம் காணும் என எதிர்பாரக்கலாம். இதனை மனதில் கொண்டு புலம் பெயர் தமிழர் அமைப்புகள் தமது அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதில் புதிய வழி முறைகளை மேற்கொள்வது பயன் மிக்கதாக அமையும். புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர் பேரவைகள் உலகத் தமிழர் பேரவைகள் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் இந்து ஆலயங்கள் கூடத் தமது ஒருமனதான வேண்டுகோளை சிமானுக்கும் ஏனைய தமிழக தமிழ் உணர்வு சக்திகளுக்கு விடுத்தும் ஆதரவைத் தெரிவித்தும் ஈழத் தமிழர் பக்கம் இந்திய அரசியலில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இழந்து விட்ட இந்திய அரசின் ஆதரவை மீளப் பெற முடியும்.
சென்ற சட்ட மன்றத் தேர்தலின் போது இப்படியான ஒரு வேண்டுகோளைச் சுவிஸ் தமிழர் பேரவை மட்டுமே விடுத்த போதும் அதனை செல்வி ஜெயலலிதா தமது தேர்தல் மேடையில் மக்கள் முன் தாமே படித்துக் காட்டியமை எமது எந்த ஒரு சிறு கோரிக்கையும் அவர்களின் கவனத்துக்கு எடுக்கப் படும் என்ற உண்மையை உணர்த்துகிறது.
2009 பொதுத் தேர்தலைப் பல சக்திகள் சிங்களத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்த காரணத்தாலும் பணமும் அதிகார பலமும் நேர்மையான தேர்தல் இடம்பெற அனுமதிக்காத நிலையிலும் சிங்களத்தின் ஈழத் தமிழின அழிப்புக்கு முழுமையான ஆதரவு கிடைத்தது. அதற்கு அன்று தமிழன ஆதரவுச் சக்திகளிடையே நிலவிய ஒற்றுமை இன்மையும் விஜயகாந்தின் தே.மு.க. தனித்துப் போட்டியிட்டதால் எற்பட்ட வாக்குச் சிதறடிப்பும் காரணமாயின.

இன்று நிலைமை காங்கிரஸ் தி.மு.க. அணிக்கு முற்றிலும் விரோதமாக திரும்பி விட்டதை அண்மையில் வெளியான இந்தியா டுடேயின் வாக்காளர் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தி உள்ளது. எனவே எமது ஒட்டு மொத்த குரலாக இந்தத் தடவை புலம் பெயர் ஈழத் தமிழர் இந்திய அரசின் கவனத்தை பெற முயலவேண்டும்.

இத்தேர்தல் பற்றிய முதலும் இறுதியுமான கருததுக் கணிப்;பு அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னர் யாரும் எதுவித கருத்துக் கணிப்பும் செய்வதை சட்டம் அனுமதிக்காது என்பதால் இந்தக் கருத்துக் கணிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டி உள்ளது.

இதன் பிரகாரம் இந்திய அரசியலில் தினமும் வெளியாகும் இலஞ்ச ஊழல் பண வீக்கம் காய்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் அதி உச்ச விலை உயர்வு என்பவற்றால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான 9 கட்சிகளின் ஐக்கிய முன்னணிக் கூட்டும் சோனியா ராகுல் மன்மோகன் சிங் ஆகியோரின் செல்வாக்கும் நம்பகத் தன்மையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

2010 டிசெம்பர் 4ந் திகதி முதல் 19ந் திகதி வரை பொத்தாம் பொதுத் தெரிவாக 98 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள நகரங்கள் கிராமங்கள் ஆண்கள் பெண்கள் பல் வேறு வயதினர் தரத்தினரிடையே உள்ள 12|380 வாக்காளரிடையே இந்தத் தேசத்தின் கருத்தறியும் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 2009ல் 206 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் 2011 ஜனவரியில் 162 முதல் 172 தொகுதிகளை மட்டுமே பெறக் கூடிய நிலையில் உள்ளது.
17 சத வீதமாக இருந்த சோனியாவின் செல்வாக்கு வெறும் 8 சத வீதத்திலும் 29 வீதமாக இருந்த ராகுலின் செல்வாக்கு 20 சத வீதமாகவும் காணப்படுகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை 42 சத வீத மக்கள் தி.மு.க.வையும் 40 வீதமானோர் அ.தி.மு.க.வையும் ஆதரிக்கின்றனர். விஜயகாந் 8 வீத ஆதரவைக் கொண்டுள்ளார். 17 சத வீதமாக இருந்த காங்கிரஸ் ஆதரவு வெறும் 1 சத வீதமாக இறங்கி விட்டது.
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்குத் துணைசெய்த விஜங்காந் இம்முறை கூட்டணிக்குத் தயார் என ஏலத்துக்கு இறங்கி விட்டார். அவரை இம்முறை ஜெயலலிதா வளைத்துப் போட்டு ஒரு உறுதியான வெற்றிக் கூட்டணிக்கு அடி கோலலாம். இருவரும் முன்னர் காரசாரமாக சொற்போர் நடத்தியதால் உள்ளுக்குள் புகைச்சல் இருக்கவே செய்யும். ஆயினும் தனிப்பட்ட முரண்பாடுகள் இருப்பினும் தொகுதி உடன்பாடு கண்டு இருதரப்பும் இலாபம் பெற முன்வரலாம்.
அதன் மூலமே தி.மு.க.வை வெல்ல இயலும் என்ற களநிலை யதார்த்தம் இருவருக்கும் விளங்கும் என்பதால் தற்காலிக தேன் நிலவுக் காலம் ஒன்று ஏற்படலாம். எப்படியோ பல இலட்சம் கோடி இலஞ்ச ஊழல்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தினமும் வெளியாகி வருவதும் பணவீக்கம் 18.75 வீதம் கண்டு விலைவாசி ஏற்றம் மக்களை வெறுப்பேற்றி விட்ட நிலையில் காங்கிஸ் கூட்டணி உயிர் தப்பும் எனக் கூற முடியாது.
புதிய தேர்தல் ஆணையாளர் குரோஷி வாக்குப் பதிவு இயந்திரத்தில் திருத்தம் செய்தல் தேர்தல் செலவினக் கட்டுப்பாடுகள் வாக்குப் பதிவுகளில் மாற்றங்கள் எனப் பல புதுமைகள் பற்றிப் பேசி வருகிறார். எந்த அளவுக்கு அவர் வெற்றி காண்பார் என்பதைப் பொறுத்து இருந்துதான் பாரக்க வேண்டும். முன்னாள் தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவும் தமது பதவிக் காலத் தோல்விகளை வெளிப்படையாகக் கூறியமை குரோஷிக்கு புதுத் தென்பைக் கொடுத்துள்ளது.

மொத்தத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றே கூறமுடியும். அதனை ஈழத் தமிழினம் எப்படித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் போகிறது? அண்ணன் வருவார் அள்ளித் தருவார் என அணிலை ஏற விட்டு மேலே மரத்தைப் பார்த்துக் குரைக்கும் வேட்டை நாயின் நிலைதான் தொடருமா?

 

1 comments:

  1. ஆமாம் தமிழீழத்தை இனி சீமான், விஜய், விஜயகாந்த், கார்த்திக், சரத், ராதிகா போன்ற சினிமாக்காரர்கள்தான் உருவாக்க வேண்டும். இதை எழுதியவரும் ஒரு தமிழந்தான். தமிழனுக்கு ஏன் இப்படி கோன புத்தி. இவரே நாளை ஜெயலலிதா போனால்தான் ஈழம் வரும் என்பார். திருமாவளவனை பார்த்துமா நீங்கள் திருந்தவில்லை. பதிவு எழுதும் ஈழ தமிழர்களே அமைதியாக இருங்கள். செய்ய வேண்டியதை தேவையான நேரத்தில் தமிழர்கள் செய்வார்கள். நீங்களாக ஏதாவது கற்பனை செய்து எழுதி மக்களை வெறுப்பேற்றாதீர்கள்.. அது உங்களுக்கு எதிராகத்தான் போய் முடியும். கடந்த தேர்தல்களை மனதில் வைத்து அமைதி காக்கவும். நன்றி

    ReplyDelete