Thursday, January 20, 2011

துனீசியா, லெபனான் விவகாரத்தில் தலையிடாதீர் - நிஜாத் எச்சரிக்கை

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்கா, இஸ்ரேல், சில மேற்கத்திய நாடுகள் ஆகியன துனீசியா மற்றும் லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனோரீதியிலான போர்மூலம் துனீசியா மக்களின் உரிமைகளை பறிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக அஹ்மத் நிஜாத் குறிப்பிட்டார்.

புதன்கிழமை அன்று மத்திய ஈரான் நகரமான யஸ்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார் அவர்.

துனீசியாவில் 26 வயது காய்கறி வியாபாரியான இளைஞர் ஒருவரின் தற்கொலை மூலம் உருவான மக்கள் புரட்சி அந்நாட்டு அதிபரை நாட்டை விட்டு ஓடவைத்தது. தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அஹ்மத் நிஜாத் இதனைக் குறித்து தெரிவிக்கையில், துனீசிய அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு தலையீடுக் குறித்து மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். துனீசிய மக்கள் ஒரு இஸ்லாமிய அரசைத்தான் விரும்புகிறார்கள்.

அஹ்மத் நிஜாத் தனது உரையில் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலை வழக்கை விசாரிக்கும் ஐ.நா தீர்ப்பாயத்தை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் லெபனானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தவேண்டும். இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குறிப்பிட்டார்.

ஈரான் கடந்த 32 வருடங்களில் பெற்ற வெற்றிகளை குறிப்பிட்ட நிஜாத், ஈரான் தற்பொழுது உலக நாடுகளிடையே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதன் எதிரிகள் மண்டியிடுகின்றனர் என குறிப்பிட்டார்.

செய்தி:PRESSTV

1 comments: