Tuesday, January 18, 2011

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்

சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மஸ்ஜித் ஒன்றை கட்டவிருக்கிறார்.

1200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்த நபர் கேரளாவில் முஸ்லிம்கள் இறைவனுக்கு வணக்கங்களை நிறைவேற்றும் மஸ்ஜிதை கட்டவிருக்கிறார் என சி.கே.மேனன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதத்திற்குள் மஸ்ஜித் கட்டும் பணி பூர்த்தியாகும். 400க்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் மஸ்ஜித் கட்டப்படும். இதற்கு முன்பு எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னன் ராம வர்மா குலசேகரன் கட்டிய சேரமான மஸ்ஜித் தான் இதற்கு முன்பு ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவரால் கட்டப்பட்டது என சி.கே.மேனன் குறிப்பிடுகிறார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெஹ்ஸாத் க்ரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் மற்றும் மேனஜிங் டைரக்டராக செயல்பட்டு வருகிறார் சி.கே.மேனன்.

மஸ்ஜிதை கட்டுவதற்குரிய அனுமதியை முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் சி.கே.மேனன் தெரிவிக்கிறார். இதுத் தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து கடிதங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் இதில் திருப்தியை தெரிவித்துள்ளனர்.

மஸ்ஜிதின் கட்டுமானப்பணி பூர்த்தியானால் அடுத்ததாக கிறிஸ்தவ சர்ச் ஒன்றைக் கட்டப்போவதாக சி.கே.மேனன் அறிவித்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதீய விருதும், 2007 ஆம் ஆண்டில் சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதும் சி.கே.மேனனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ்

0 comments:

Post a Comment